Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தர்மபுரி:தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக மாவட்டந்தோறும் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் எனது ஓட்டு விற்பனைக்கு என்று பதாகை எந்தியவாறு கூலி தொழிலாளி வலம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் (வயது 46). இவருக்கு மனைவி 3 மகள், ஒரு மகன் உள்ளனர்.
நேற்று தருமபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த சரவணன், பதாகை ஒன்றை கையில் ஏந்தியபடி நின்றிருந்தார். அதில், எனது ஓட்டு விற்பனைக்கு என்ற வாசகத்துடன்தனது செல்போன் எண்ணையும் குறிப்பிட்டிருந்தார். இந்த பதாகையுடன் பாலக்கோடு உள்பட மாவட்டம் முழுவதும் வலம் வரப்போவதாக தெரிவித்தார்.இது குறித்து அவர் கூறும் போது,‘‘ இன்றைய அரசியல் சூழ்நிலை பணத்தை மையமாக வைத்தே நடக்கிறது. ஓட்டு போடுவதற்கு பணம். வேட்பாளராவதற்கு பணம், எம்.எல்.ஏவாக பணம், எல்லாவற்றையும் பணம் கொடுத்து தான் பெறவேண்டி உள்ளது.
அரசியலில் சேவை என்பது குறைந்துவிட்டது. பணம் வாங்காமல் பல வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதில்லை. எனவே தான், பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடாதீர்கள் என்பதற்காக எனது ஓட்டு விற்பனைக்கு என்று கூறி பதாகை ஏந்தியவாறு வலம் வந்தேன். கலெக்டர் அலுவலகத்தை தொடர்ந்து. பாலக்கோடு தொகுதி உள்ளிட்ட அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல உள்ளேன் என்றார்.